ஸ்ரீமத் பாகவதம் பத்தாம் காண்டம்–பாகம் இரண்டு “மிகப்பெரிய நன்மை” (Srimad Bhagavatam Patthaam Kaandam-Baagam Irandu Migapperiya nanmai)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
ஸ்ரீமத் பாகவதம் வேதாந்த காவியமும் இலக்கிய நூலுமாகிய ஸ்ரீமத் பாகவதம், கால பரிமாணத்திற்கு அப்பாற்பட்ட அறிவுக் களஞ்சியங்கள் என்று அறியப்படும் வேதங்களில் ஒரு போற்றத்தக்க நிலையை வகிக்கின்றது. மனித அறிவாற்றல் குறித்த அனைத்து துறைகளுடனும் தொடர்பு கொண்ட வேதங்கள் இதன் ஆதியில் வாய்மொழி மரபாக பேணி பாதுகாக்கப்பட்டு வந்தன. பின்னர், பகவானின் இலக்கிய அவதாரம் என்று அறியப்படும் ஸ்ரீல வியாசதேவர் இவற்றை எழுத்துக்களில் வடித்தார். வேதங்களைத் தொகுத்த பின்னர், அவற்றின் ஆழ்ந்த கருத்துகளின் சாரத்தை ஸ்ரீமத் பாகவதம் என்னும் வடிவில் வழங்குமாறு ஸ்ரீல வியாசதேவர் தனது ஆன்மீக குருவினால் ஊக்கப்படுத்தப்பட்டார். எனவே, ஸ்ரீமத் பாகவதம், “வேத ஞானம் என்னும் மரத்தின் கனிந்த பழம்” என்று அறியப்படுகிறது. இது வேத அறிவை முழுமையாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வழங்கக்கூடியதாகும். ஸ்ரீமத் பாகவதத்தை எழுதிய பின்னர் வியாசர் அதனைத் தன் மைந்தனான சுகதேவ கோஸ்வாமிக்குக் கற்பித்தார். இவர் பிற்காலத்தில் புனித கங்கை நதிக் கரையில் கூடிய ரிஷிகள் அடங்கிய கூட்டத்தில் மகாராஜா பரீட்சித்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தைக் கூறினார். மகாராஜா பரீட்சித், மாபெரும் இராஜரிஷியாகவும் (ரிஷியைப் போன்ற மன்னராகவும்) உலக சக்கரவர்த்தியாகவும் வாழ்ந்தபோதிலும், இன்னும் ஏழு நாள்களுக்குள் தான் இறக்கப்போகிறோம் என்பதை அறிந்தவுடன், தனது இராஜ்யத்தைத் துறந்து ஆன்மீக ஞானத்தைத் தேடி கங்கை நதிக் கரைக்குப் போனார். மகாராஜா பரீட்சித்தின் கேள்விகளும் சுகதேவ கோஸ்வாமியின் தெளிவூட்டும் பதில்களும் ஸ்ரீமத் பாகவதத்தின் அஸ்திவாரமாகும். இந்தக் கேள்வி பதில்கள் ஆன்மாவின் தன்மையிலிருந்து பிரபஞ்சத்தின் ஆதிவரை அனைத்தையும் தழுவியதாகும். இந்த நூல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் கல்விப் புலமையினாலும் இறைத் தொண்டினாலும் உருவான நூல். இவர் இந்தியாவின் சமயம் மற்றும் வேதாந்தச் சிந்தனையைக் கற்பித்த மிகமிகப் புகழ்பெற்ற உலக ஆசான் ஆவார். அவருடைய சமஸ்கிருதப் புலமையும், வேத கலாசாரத்தின்பால் அவருக்கிருந்த நெருக்கமும் இந்நூலில் இழையோடுகின்றன. பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை வழங்கியுள்ள ஸ்ரீமத் பாகவதம் ஒரு புத்தகக் களஞ்சியமாக நவீன கால மனிதனின் அறிவுசெறிந்த, கலாசார, ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கிய இடத்தைக் காலவரையின்றி ஆட்கொள்ளும் என்பதில் சிறிதும் ஜய்யமில்லை. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆங்கிலத்தில் வழங்கிய ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றி விமர்சகர்கள் சொல்வது: “தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் மொழிபெயர்த்துள்ள ஸ்ரீமத் பாகவதம் என்னும் இந்த உன்னத பதிப்பைப் படிக்கும் பேற்றினை சமீபத்தில் பெற்றேன். இந்த வரலாற்றுச் சாதனை பாகவதத்தின் அதி உன்னதச் செய்தியை கணக்கிலடங்காத மேலை நாட்டவர்களுக்கு எடுத்துச் செல்லும். இவர்களுக்கு வேறு எந்த விதத்திலும் இத்தகைய வாய்ப்பு கிடைக்காது.” டாக்டர் அலக்ஸ் வேமன் சமஸ்கிருத துறைப் பேராசிரியர் கொலம்பியா பல்கலைக்கழகம் “பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை வெளியிடும் பிரபலமான இந்திய சமய நூல்கள், புது மொழிபெயர்ப்பு மற்றும் வர்ணனைகளுடன் கூடி ஆன்மீக இந்தியாவைப் பற்றிய நம்முடைய வளர்ந்துவரும் அறிவுக்கு மற்றுமொரு சேர்க்கையாகும். ஸ்ரீமத் பாகவதத்தின் இப்புதிய வெளியிடு குறிப்பாக வரவேற்பிற்குரியது.” டாக்டர் ஜான் எல். மிஷ் கீழ்திசைப் பிரிவுத் தலைவர் நியூயார்க் பொது நூலகம்
Sample Audio